பதிவு:2025-01-09 15:07:46
திருவள்ளூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்து முடித்து பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200 ம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300,மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை, மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 ம், மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் பத்தாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 28.02.2025 உடன் ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதார்களும், அனைத்துவகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற பதிவுதாரர்களும் தகுதியானவர்கள் ஆவார்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை, மனுதாரர் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் வாயிலாக எவ்வித ஊதியம் பெறுபவர் மற்றும் மகளிர் உரிமைத் தொகை, அரசு துறைகளில் உதவித் தொகை பெறுபவராக இருத்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி கல்விக் கற்கும் மனுதாரருக்கு பொருந்தாது. மேலும். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு பதிவினை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியான உதவித்தொகை மூன்றாண்டுகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து 10 ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும், இதுவரை சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்காத பயனாளிகள் உடனடியாக திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் சுய உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.