சிறுவானூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் :

பதிவு:2025-01-21 11:58:47



சிறுவானூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் :

சிறுவானூர் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் :

திருவள்ளூர் ஜன 21 : திருவள்ளூர் நகராட்சியுடன் சேலை, காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, திருப்பாச்சூர், சிறுவானூர், மேல்நல்லாத்தூர், வெங்கத்தூர் மற்றும் புட்லூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு 9 கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுவானூர் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க கூடாது என்றும், அவ்வாறு திருவள்ளூர் நகராட்சியுடன் எங்கள் ஊராட்சியை இணைத்தால் எங்களுக்கு 100 நாள் வேலை கிடைக்காது, வரி விதிப்பும் அதிகரித்துவிடும் என்று கூறி சிறுவானூர் ஊராட்சியாகவே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டால் குடிநீர் வரி, வீட்டு வரி, சாலை வரி என அதிகப்படியான வரிகள் விதிக்கப்பட்டு நாங்கள் அவதிக்குள்ளாக்கப்படுவோம்.

மேலும் எங்களுடைய தின வருமானம் குறைந்த நிலையில் உள்ளதால் எங்களால் அத்தகைய தொகையை கட்ட முடியாது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறி நேற்று சிறுவானூர் பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையான சிறுவானூர் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து கோஷங்களை எழுப்பியப்படி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சாலையின் இரண்டு புறமும் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட தொலைவிற்கு அணிவகுத்து நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பெண்கள் சாலை மறியல் காரணமாக சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் அந்த வழியாக போக்குவரத்து சீரானது.