பதிவு:2025-01-24 12:24:44
ஆர் .கே.பேட்டை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அந்த அந்த வட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் முடிவுற்ற திட்ட பணிகள், நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்
அதன் அடிப்படையில் ஆர் .கே.பேட்டை வட்டத்தில் உள்ள அம்மையார்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.2.36 கோடி மதிப்பீட்டில் 10 வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் மேலும் அதே பள்ளியில் மாணவர்கள் வருகை பதிவு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், நீண்ட நாள் வருகை புரியாத மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறப்பட்டது.
பின்னர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயன் பெற்ற மாற்றுத்திறனாளி பயனாளிகளிடம் வீடு கட்டுவது தொடர்பாக ஆலோசனை வழங்கபட்டது. பின்னர் அம்மையார்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆண்கள் ஆதிதிராவிடர் நல விடுதி, பாலபுரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டு கட்டும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித் துறை தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் குப்பை மற்றும் மக்கா குப்பை அகற்றி நுண்ணுயிர் உரம் தயாரிப்பு பணிக்கூடம், இரா.கி.பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பணிகளை ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு அருந்தினேன்.மேலும் பள்ளிக்குத் தேவையான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரவும்,அதே பகுதியில் அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்து இன்று முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. இராஜ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், உதவி ஆட்சியர் ( பயிற்சி) ஆயுஷ் குப்தா, தனித் துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், பொதுப்பணித்துறை கட்டடம் செயற்பொறியாளர் தேவன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் ராஜேஷ்குமார், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வி, செந்தில்குமார்,மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மோகனா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.