அரண்வாயல்குப்பத்தில் சுடுகாடு கேட்டு மூதாட்டியின் உடலை வைத்து சாலை மறியல் : அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: அரசின் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக எச்சரிக்கை :

பதிவு:2025-01-24 12:26:43



அரண்வாயல்குப்பத்தில் சுடுகாடு கேட்டு மூதாட்டியின் உடலை வைத்து சாலை மறியல் : அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: அரசின் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக எச்சரிக்கை :

அரண்வாயல்குப்பத்தில் சுடுகாடு கேட்டு மூதாட்டியின் உடலை வைத்து சாலை மறியல் : அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: அரசின் ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாக எச்சரிக்கை :

திருவள்ளூர் ஜன 24 : திருவள்ளூர் ஒன்றியம் அரண்வாயல்குப்பம் ஊராட்சியில் வேட்டைக்காரன் இனத்தைச் சேர்ந்தவர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதில் யாரேனும் உயிரிழந்தால் தகனம் மற்றும் அடக்கம் செய்வதற்கு கூவம் ஆற்று கரையோரம் உள்ள பகுதிகளை பயன்படுத்தி வந்தனர். கூவம் ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருந்தாலோ, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ தகனம், மற்றும் அடக்கம் செய்ய முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேட்டைக்காரன் சமூகத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மனைவி அன்னம்மாள் (80) என்ற மூதாட்டி மரணமடைந்தார். அந்த மூதாட்டியையை அடக்கம் செய்வதற்காக கொண்டு வந்த போது கூவம் ஆற்றில் தண்ணீர் இருந்ததால் கரையோரத்தில் புதைக்க முடியாத சூழ்நிலை உருவானது. இதனால் மற்றொரு சமூகத்தை சேர்ந்து சுடுகாடு பகுதிக்கு வந்தனர். ஆனால் அந்த சமூகத்தினர், இதையே வழக்கமாக கொண்டால் எங்களுக்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இறந்த மூதாட்டியின் உறவினர்கள் திருவள்ளூர் - பூந்தமல்லி சாலையில் சுடுகாடு கேட்டு மூதாட்டியின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த், காவல்துறையினர். சமாதான பேச்சுவாரத்தை நடத்தினர். கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக எத்தனையோ கலெக்டர்கள் நேரில் வந்து சுடுகாடு அமைத்து தரப்படும் என உறுதி அளித்து சென்றனர். ஆனால் யாரும் இதுவரை சுடுகாடு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் எங்களுக்கு அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் அலைக்கழிக்கின்றனர். அரசால் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் நாங்கள் கலெக்டரிடம் ஒப்படைத்து விடுகிறோம். அரண் வாயில்குப்பத்தில் வேட்டைக்காரன் சமூகமே இல்லை என்று அறிவித்து விடட்டும் என பொதுமக்கள் கொந்தளித்தனர்.

இதனையடுத்து இந்த பகுதியில் சுடுகாட்டிற்கு மாற்று இடம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் திருவள்ளூர் தாசில்தார் ரஜினிகாந்த் உறுதி அளித்தார் .இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.