பதிவு:2025-01-28 12:47:26
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக புதிய தலைவராக அஸ்வின் அவர்களை தலைமை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் வாக்குவாதம் :
திருவள்ளூர் ஜன 28 : தமிழக பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் தேர்வுக்கான விருப்ப மனு நேற்று பெறப்பட்டது. இந்த மாவட்ட தலைவர் தேர்வுக்கான விருப்பமனுவை முன்னாள் மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிமா மகேந்திரா. மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். கருணாகரன். ஆர்யா சீனிவாசன் ஆகியோர் தங்களது விருப்ப மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சுமதி வெங்கடேசன் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, கோட்ட பொறுப்பாளர் பாஸ்கர், அரசு தொடர்பு பிரிவு மாநில தலைவர் எம் பாஸ்கர் ஆகியோரிடம் வழங்கினர்.
இதற்கான முடிவுகளை இன்று திருவள்ளூர் ஆவடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காணொளி காட்சி மூலம் மாலை 3.30 மணி அளவில் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பில் முன்னாள் மாவட்ட தலைவர் அஸ்வின் ராஜசிம்மா மகேந்திராவை தேர்வு செய்ததாக மாநில தலைமை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பாஜக கட்சி நிர்வாகிகள் அஸ்வினுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கீழே இறங்கி வந்த தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களிடம் மற்ற நிர்வாகிகள் அஸ்வின் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் பொறுப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பல ஆண்டுகளாக கட்சியில் பணியாற்றி வரும் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கூட தகவல் அளிக்காமல் நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், தலைமையில் ஒருவர் பேச்சை மட்டும் கேட்டுக் கொண்டு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக மாவட்ட தலைவரை தேர்ந்தெடுப்பது நியாயம் இல்லை எனவும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தாங்கள்தான் முன் நின்று கட்சிக்காக பாடுபட்டு வருவதாகவும் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்யா சீனிவாசன் தரப்பு நிர்வாகிகள் மாநிலத்திலும் மாவட்டத்திலும் தொடர்ந்து ஒரு ஜாதியினருக்கே பொறுப்புகள் வழங்குவதாகவும் மற்றவர்கள் பொறுப்பிற்கு வரக்கூடாதா? இது ஜாதி கட்சியா அல்லது குடும்பக் கட்சியா என கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதமானது நீடித்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் அனைவரும் தலைமைக்கு வாருங்கள் தங்களது குறைகளை கூறுங்கள் என தெரிவித்து விட்டு தேர்தல் அதிகாரி சுமதி வெங்கடேசன் கிளம்பிச் சென்றார். மாவட்டத் தலைவரை அறிவிக்கும் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளே தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.