பதிவு:2025-01-30 12:16:00
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் மூதாட்டி மீது சுடு தண்ணீர் கொட்டி தீ காயம் : சிகிச்சை பலனின்றி பலி :
திருவள்ளூர் ஜன 30 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு அருகே நரசிங்கபுரம் பெரிய தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியம் (45). இவரது தாயார் சரஸ்வதி 70. இவர் தனது தம்பி அற்புதராஜ் இறந்துவிட்டதால் அவரது மனைவி புனிதா என்பவருடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி காலை மூதாட்டி சரஸ்வதி வீட்டை பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் வெளியே அடுப்பில் வைக்கப்பட்டிருந்த சுடு தண்ணீர் கால் தடுக்கி விழுந்து விழுந்துள்ளார். இதில் மூதாட்டி சரஸ்வதிக்கு உடலின் பின் பக்கம் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை உடனடியாக பேரம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை பெற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொடர்ந்து ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி சரஸ்வதி உயிரிழந்துள்ளார். இது குறித்து மூதாட்டி சரஸ்வதியின் மகன் ஆரோக்கியம் மப்பேடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.