பதிவு:2025-02-04 13:12:54
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
திருவள்ளூர் பிப் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 337 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 85 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 78 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 42 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 62 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 70 மனுக்களும் என மொத்தம் 337 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன்(பொது), தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மற்றும் அனைத்து துறை சார்ந்த உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.