பதிவு:2025-02-08 13:07:24
திருவள்ளூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் வார்டு உறுப்பினருக்கு இளைஞர்களால் அரிவாள் வெட்டு : அரசு மருத்துவமனையில் சிகிச்சை :
திருவள்ளூர் பிப் 08 : திருவள்ளூர் அடுத்த அதிகத்தூர் இந்திரா நகர் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் வார்டு உறுப்பினர் ஜெகதீசன். இவருக்கும் அதே கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் என்பவர் மகன் சேகுவாரா என்பவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் இருந்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நண்பர்களுடன் ஜெகதீசனை நோக்கி வந்த சேகுவாரா உள்ளிட்ட மூன்றுக்கும் மேற்பட்டோர் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜெகதீசன் தலையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே மயங்கி விழுந்த முன்னாள் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜெகதீசனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடம்பத்தூர் காவல் நிலைய போலீசார் ஜெகதீசனை வெட்டிவிட்டு தப்பிய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன், முன்னாள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினரை வெட்டிய சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.