பதிவு:2025-04-10 10:28:05
திருவள்ளூர் மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் விண்ணப்ப கட்டணத்தை விட கூடுதலாக தொகை பெற்றால் புகார் தெரிவிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஏப் 10 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு இ-சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி விண்ணப்பம் செய்ய வரும் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்ப கட்டணமாக அரசு நிர்ணயம் செய்த தொகையை விட கூடுதலாக ரூபாய் 200 வரை கோரப்படுகிறது எனவும், மேலும் பட்டா மற்றும் இதர சான்றுகள் கோரி வரும் பொது மக்களிடம் தாங்களே சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து பட்டா மற்றும் சான்றுகளைப் பெற்று தருவதாக கூறி, அதன் மூலம் அதற்கு ஈடாக தொகையினை பெறுகின்றனர் எனவும், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களிடமிருந்து தொடந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்ப கட்டணத்தை விட கூடுதலான தொகையினை பெறுவதும், பட்டா மற்றும் இதர சான்றுகள் பெற்று தருவதாக இடைத்தரகர் பணி மேற்கொள்வதும் சட்டத்திற்கு புறம்பானது ஆகும்.
எனவே, இது போன்ற புகார்கள்வரப் பெரும் சம்மந்தப்பட்ட இ-சேவை மையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளரகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. மேலும் சம்மந்தப்பட்ட நபர்கள் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர்களும் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் இ-சேவை மையங்களில் கண்காணிப்பு பணிமேற்கொண்டு, மேற்படி புகார்கள் வராத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்குமாறும்,மேலும் இது தொடர்பாக புகார்கள் இனிவரும் காலங்களில் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள், விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 044-27662455 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.