பதிவு:2025-05-16 11:44:14
பாலியல் தொல்லை கொடுத்த வீட்டு உரிமையாளர், நடவடிக்கை எடுக்காத வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண் தனது 2 மகள்கள் உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டம் :
திருவள்ளூர் மே 16 : திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை மாருதி தெருவை சேர்ந்தவர் முகமதுபாரிக். இவரது வீட்டில் உமாமகேஸ்வரி (37) என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கடந்த 10 மாதங்களாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தான் குடியிருந்து வரும் வீட்டிற்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வீதம் வாடகை செலுத்தி வந்துள்ளனர்.
உமா மகேஸ்வரி கடந்த 2 மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.இதனால் வீட்டின் உரிமையாளருக்கும், உமாமகேஸ்வரிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் உரிமையாளர் முகமது பாரிக் உமா மகேஸ்வரியை வாடகை பணம் கேட்டபோது அவர் இரண்டு மாதங்களுக்குள் தந்து விடுவதாக கூறியுள்ளார். அவர் வீட்டு வாடகை சம்மந்தமாக பேச வேண்டுமென தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதில் ஆத்திரம் அடைந்த வீட்டு உரிமையாளர் உமா மகேஸ்வரியின் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் பித்தளை, வெள்ளி பொருட்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட உமா மகேஸ்வரி நடவடிக்கை எடுக்க கோரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார்.
ஆனால் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகள்கள் மற்றும் உறவினர்களுடன் வந்து அனைவரும் வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு, கையில் வீட்டு உரிமையாளர் முகமதுபாரிக் மற்றும் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கையில் பதாகைகளை ஏந்தியவாறு கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பிரதாப்பிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.