பதிவு:2025-05-16 11:58:16
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கிய இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை மற்றவர்கள் பயன்படுத்தினால் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் மே 16 : தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.101800 மதிப்பிலான இணைப்புசக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது. பட்டதாரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சொந்த தொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள் தங்களது தினசரி போக்குவரத்து தேவைக்கு இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரைபெற்றஒருசிலமாற்றுத்திறனாளிகள் இணைப்பு சக்கரத்தை கழட்டி விட்டு அவர்களின் குடும்பத்தை சேர்ந்த உறவினர்களோ ,அவர்களது நண்பர்களோ பயன்படுத்தி வருவது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. இச்செயலானது மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அவர்களது சொந்த தேவையை பிறர் உதவியின்றி செயல்படுத்த ஏதுவாக இந்த நலத்திட்டத்தை வழங்கும் தமிழக அரசின் உன்னத நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது.
மேலும் இணைப்பு சக்கரத்தை கழட்டி விட்டு ஓட்டும் மாற்றுத்திறனாளி அல்லாத பிற நபர்கள் மூலம் ஏற்படும் விபத்துகளினால் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளியே போலீஸ் வழக்குகளை சந்திக்க நேருகிறது. எனவே தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரின் இணைப்பு சக்கரங்களை கழட்டி ஓட்டும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் இந்த ஸ்கூட்டரின் இணைப்பு சக்கரங்களை கழட்டுவதற்கான பணி செய்யும் இரு சக்கர வாகன பழுது நீக்குபவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.