பதிவு:2022-06-14 21:04:30
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூன் 14 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 60 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 10 மனுக்களும், 100 நாள் வேலை கோரி 15 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 18 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 87 மனுக்களும் என மொத்தம் 232 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,05,000 வீதம் ரூ.3,15,000 மதிப்பீட்டிலான மின்கலனால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, முடநீக்கு வல்லுநர் ஆஷா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.