பதிவு:2025-06-02 12:18:43
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு : மாணவ, மாணவிகளுக்கு வழங்க புத்தகங்கள், நோட்டுகள், சீரூடைகள் தயார் :
திருவள்ளூர் ஜூன் 02 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்குவதற்காக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தயாராக உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறைக்கு பின் இன்று திறக்கப்பட்டன. இந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் மற்றும் சீருடைகள் ஆகியவைகளை உடனே வழங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மற்றும் பொன்னேரி கல்வி மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகள் - 1111, உயர்நிலைப் பள்ளிகள்- 132, மேல்நிலைப் பள்ளிகள்- 117 உள்ளன. இதில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 98 ஆயிரத்து 503 மாணவ மாணவிகளுக்கும், பாடப் புத்தகங்கள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 948 மாணவ, மாணவிகளுக்கும் நோட்டுப் புத்தகங்களும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 140 மாணவர், மாணவிகளுக்கும் விலையில்லா சீருடைகள், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 1 லட்சத்து 56 ஆயிரத்து 948 பேருக்கும் விலையில்லா புத்தகப்பையும் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் இன்றைய தினமே தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் விலையில்லா,புத்தகம், நோட்டு புத்தகம், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகள் வழங்குவதற்காக விநியோகக்கும் மையங்களில் இருந்து பெறப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தவுடன் புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகள் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.