பதிவு:2025-06-03 14:32:45
பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 04 : தமிழ்நாடு அரசால் திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி விடுதிகள் மாணவர்களுக்கு 23 மாணவிகளுக்கு 10 உள்ளன.கல்லூரி விடுதிகள் மாணவர்களுக்கு 1 மாணவிகளுக்கு 1 என மொத்தம் 35 விடுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவர்/ மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு ,பட்டமேற்படிப்பு , ஐஐடி மற்றும் பாலிடெக்னிக் படிப்பகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேர தகுதியுடையவர்கள்.
அனைத்து விடுதி மாணவ,மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும்.10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/ மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு NEET/ JEE நுழைவுத் தேர்வுக்கான வினாவங்கி நூல்கள் , சிறப்பு வழிகாட்டிகள் மற்றும் பாடவாரியான வினாவங்கி நூல்கள் வழங்கப்படும்.கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஜமுக்காளமும் , பள்ளி விடுதிளில் தங்கிப்பயிலும் மாணவ /மாணவியர்களுக்கு ஆண்டு தோறும் பாய்களும் வழங்கப்படும்.பள்ளி ,கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்.மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேர பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்குப் பொருந்தாது. தகுதியுடைய மாணவ,மாணவியர்கள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்,காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொருத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்/ காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 18.06.2025 க்குள்ளும் கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2025 க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களின் நகல்கள், ரேசன் அட்டை நகல் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட சலுகைகள் விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் வழங்கப்படுகின்றன
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் அரசின் சலுகைகளைப் பெற்று பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.