பதிவு:2025-07-17 21:53:16
திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 17 : தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் பிரதி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில் வரும் 18.07.2025 வெள்ளிக்கிழமை அன்று திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் காலை 10.00 மணியளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்; நடைபெற உள்ளது. இதில் 25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 250-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்களுக்கு தேவையான வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை நாடுநர்கள் தனியார்துறை இணையதளத்தில் (www.tnprivatejobs.tn.gov.in) பதிவு செய்து கொள்ளலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொண்டு தனியார் துறையில் அசெம்ப்ளி லைன் ஆப்பரேட்டர், ஷீட் மெட்டல் வொர்க்கர், மெஷின் ஆப்பரேட்டர், நிர்வாகப் பணி போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்பினை பெற்று பயனடையலாம்.
இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும்,கல்வித் தகுதியும் விருப்பமும் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.