பதிவு:2025-09-10 11:15:44
எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெங்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.31.4 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட கட்டுமான பணிகளையும், தண்டலம் ஊராட்சியில் ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கூடுதல் கட்டிட கட்டுமான பணிகளையும், செங்கரை ஊராட்சியில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.2.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 53 வீடுகளின் கட்டுமான பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
தொடர்ந்து பாலவாக்கம் ஊராட்சியில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 37 வீடுகளின் கட்டுமான பணிகளையும், தாராட்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.99.42 இலட்சம் மதிப்பீட்டில் 2.1 கி மீ தூரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் ஊத்துக்கோட்டை பேரூராட்சி;, அம்பேத்கர் நகர் பகுதியில் பேரூராட்சிகள் துறை சார்பில் அயோத்தி தாசப் பண்டிதர் திட்டத்தின் கீழ் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் 221 மீ தூரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைகளை கேட்டறிந்து அக்கோரிக்கைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதில் ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, உதவி பொறியாளர் நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர் (வ.ஊ), குணசேகர் (கி.ஊ) பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், இளநிலை பொறியாளர் மகேந்திரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.