பதிவு:2025-09-25 12:02:13
திருவள்ளூரில் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு மாபெரும் கருத்தரங்கு முகாம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் மற்றும் வட்டம் ஜே.என்.சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் பால் வளத்துறை சார்பில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இணைந்து நடத்தும் பால் உற்பத்தியாளர்களுக்கான நவீன தொழில்நுட்ப விழிப்புணர்வு மாபெரும் கருத்தரங்கு முகாமினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பேசினார்.
காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 24800 பால் உற்பத்தியாளர்கள் மூலம் 515 சங்கங்களில் நாளொன்றுக்கு 1,30,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒன்றிய கூட்டுறவு சங்க உற்பத்தியாளர்களிடம் உள்ள 32000 கால்நடைகளின் தரம் உயர்த்தவும் தீவன முறைகள் நவீன அறிவியல் பூர்வமாக செயல்படுத்தி அதிக பொருள் ஈட்டவும், இதனால் பால் உற்பத்தியாளர்களின் பொருளாதாரம் உயரும் வகையில் தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் ஆர்.ஜி.எம் திட்டத்தின் மூலம், மலட்டு நீக்க சிகிச்சை முகாம் மூலம் சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சை, திறன் மேம்பாட்டு பயிற்சி, அதிக பால் கொடுக்கும் கறவை மாடுகளுக்கு பரிசு வழங்குதல், கன்று பேரணி நடத்தி பரிசு வழங்குதல்,சிறந்த செயற்கை முறை கருவூட்டலுக்கு பரிசு வழங்குதல்,கிடாரி கன்று மட்டும் பிறக்கும் உறைவிந்து குச்சி பற்றிய விழிப்புணர்வு வழங்குதல், பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஆவின் திட்டங்களை அறிந்து முழுமையாக பயனடையலாம்.மேலும் ஆவினுக்கு பால் வழங்கி அரசின் திட்டங்களில் பயன் பெறுவீர்கள் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதில் ஆவின் பொது மேலாளர் ஆ.சிவகுமார், கூடுதல் பொது மேலாளர் பி.நாகராஜன், துணை பதிவாளர் (பால்வளம்) டி.எஸ்.கணேசன் (திருவள்ளூர்), துணை பதிவாளர் (பால்வளம்) வி.ஆசீர்வாதம் (காஞ்சிபுரம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.