பதிவு:2022-06-15 15:54:11
மொண்ணவேடு கிராமத்தில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம்
திருவள்ளூர் ஜூன் 15 : பூண்டி ஒன்றியத்தில் உள்ள மொண்ணவேடு கிராமத்தில் திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகும், தொழிலாளர் துறை மற்றும் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாநில குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் துரைராஜ் தலைமை தாங்கி பேசினார்.
குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்றும், இதற்கு பெற்றோர்களும், சமுதாயமும், ஊராட்சிகளும், ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும்,கல்வி கற்க வேண்டிய பருவத்தில் வருவாய் ஈட்டுவதற்கு குழந்தைகளை ஈடுபடுத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் கூறினார். குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பின்னர் குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தலின் அவசியம், பள்ளி படிப்பை சிறார்களுக்கு உறுதி செய்தல், இடைநிற்றலை தவிர்த்தல், குழந்தை தொழிலாளர் முறையில் ஏற்படும் தனிநபர், குடும்பம் மற்றும் சமுதாய பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.அதனைத் தொடர்ந்து ஐ.ஆர்.சி.டி.எஸ் சிறுவர் குழுவை சார்ந்த மணிமேகலை வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சி (கல்வி) க்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் பங்கேற்பதற்கான உரிமை ஆகும் என கூறி,குழந்தைகளின் நான்கு முக்கிய உரிமைகளை விளக்கமாக எடுத்துக் கூறினார்.
போந்தவாக்கம் சிறுவர் குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சிறுவர் குழு உறுப்பினர்களிடையே மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் மு.துரைராஜ் குழந்தைகளின் சூழ்நிலைகள் குறித்தும், குழந்தை உரிமை குறித்தும் கலந்துரையாடினார். மேலும் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நாடகத்தை குழந்தைகள் நடத்தினார்கள். பின்னர் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த உறுதிமொழியை பங்கேற்பாளர்கள் ஏற்று கொண்டனர்.
இதில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவன இயக்குநர் ஸ்டீபன், மாவட்ட நன்னடத்தை அலுவலர் சங்கீதா, சமூக பணியாளர்கள் செந்தில், கனிமொழி, ஆற்றுப்படுத்துனர் ஜான்சி, எறையூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா ரங்கநாதன், கிராம வளர்ச்சி கமிட்டி பிரதிநிதிகள் உமாராணி, அம்பிகா, ஐ.ஆர்.சி.டி.எஸ் கள பணியாளர்கள் பழனி, பூங்கொடி, கவிதா,சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள், பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.இறுதியில் போந்தவாக்கம் தன்னார்வலர் நதியா நன்றி கூறினார்.