பதிவு:2022-06-17 12:59:07
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 20 நாட்களில் 73 லட்சத்து 63 ஆயிரம் ரொக்கம் மற்றும் 734 கிராம் தங்கம், 5020 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கை
திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிருந்தும்,ஆந்திரா கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோயிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை, ஆகியவற்றை செலுத்துகிறார்கள். பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தப்படும் உண்டியல் பணம், இதேபோல் திருத்தணிமுருகன் கோயில் உடன் இணைந்த 30 உப கோவில்கள் உண்டியல் பணம் அனைத்தையும் எண்ணுவதற்கு தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் அவர்களிடம் அனுமதி பெற்று திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம் மலைக்கோயிலில் தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
இதில் கடந்த 20 நாட்களில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.73 லட்சத்து 63 ஆயிரத்து 674 ரூபாயும், தங்கம் 734 கிராமும், வெள்ளி 5 ஆயிரத்து 020 கிராமும் காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.