பதிவு:2022-06-28 23:03:56
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் “என் பூமி - என் மரம்” என்ற திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு 75 ஆயிரம் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கான அட்டைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் “என் பூமி - என் மரம்” என்ற திட்டத்தின் கீழ் 75 ஆயிரம் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நடவு செய்து துவக்கி வைத்து, அம்மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்படுவது குறித்து கண்காணிக்கப்படும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மரக்கன்றுகளுடன், அம்மரக்கன்றுகளை பராமரிப்பதற்கான அட்டைகளையும் வழங்கி பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கும் பசுமைப் போர்வையை அதிகரித்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை, பள்ளி மாணவர்களிடையே மேம்படுத்த மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. எங்கும் பசுமைப் போர்வையை அதிகரிக்க 75 ஆயிரம் மரக்கன்றுகள் “என் பூமி - என் மரம்” என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளன. இந்த முயற்சியின் முதற் கட்டமாக, திருவள்ளூர் மாவட்ட கிராம மேம்பாட்டு நிறுவனத்திடமிருந்து 23,949 மரக்கன்றுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த செயல்முறையைப் பள்ளிகளில் பசுமைப்படையோடு இணைந்துக் கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக, ஏழாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மரக்கன்றுகளுடனான அட்டையில் அம்மரக்கன்றுக்கு ஓர் பெயரை சூட்டி, அம்மரக்கன்றை முழுமையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறாக பராமரிக்கப்படும் ஒவ்வொரு மரக்கன்றும் நாளை விரிட்சமாகி ஓர் பசுமை பகுதியாக காட்சியளிக்கும் என்பதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு மாணவ, மாணவியரும் மரக்கன்றுகளை பராமரிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ந.பூபால முருகன், எஸ்.தேன்மொழி (இடைநிலைக்கல்வி), பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.