பதிவு:2022-06-28 23:12:50
திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் சாலை தடுப்பு சுவரில் சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து : 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூர் ஜூன் 27 : ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமெண்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் எடுத்துக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் வந்துள்ளார். சென்னையில் சிமெண்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதியுள்ளது. இதனால் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அதிகளவில் இருப்பதால் 4 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.