திருவள்ளூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

பதிவு:2022-06-30 22:08:56



திருவள்ளூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

திருவள்ளூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

திருவள்ளூர் ஜூன் 30 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலை வகித்தார். அப்பொழுது வனத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது

வனத்துறையை பொறுத்தமட்டில், வனத்துறையால் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஏதாவது இடையூறுகளோ, பிரச்சனைகளோ அல்லது சாலை வசதிகளோ, தண்ணீர் வசதிகளோ எதுவாக இருந்தாலும், உங்களது பிரச்சனைகளை எடுத்துக் கூறினால் அவைகள் எல்லாம் இந்த துறையின் தலைவரிடம் தயக்கமுமின்றி உங்களது பிரச்சனைகளை தைரியமாக முழு சுதந்திரத்துடன் தெரிவிக்கலாம்.விவசாயிகள் துறை சார்ந்த கருத்துக்களை தெரிவித்துள்ளீர்கள்.இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட வனத்துறை அலுவலருடன் கலந்தாலோசித்து நாள் குறிப்பிட்டு, ஆய்வு கூட்டம் நடத்தி அந்த துறை சார்ந்த அதிகாரிகளை அழைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வனவிலங்குகளை பொறுத்தவரை பாம்பு தொல்லை வனத்துறை அலுவலர்கள் மூலமாக தனியாக நபர்களுக்கு முறையாக பயிற்சிகள் வழங்கப்பட்டு தேவையான இடத்திற்கு அந்நபர்கள் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2,80,000 நாற்றுகள் திருவள்ளூர் மாவட்டம் சார்பாக நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை 1200 பள்ளிகளில் தலா 1000 மரக்கன்றுகள் வீதம் பல இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்தால் அதன் மூலம் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் அந்த பள்ளியும் அதன் சுற்றுப்புறமும் மேம்படும் என்று கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் சித்தூர் முதல் தச்சூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை அமைக்க விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் நில எடுப்பு எடுப்பதை தவிர்க்கவும், அதானி துறைமுகம் அமைக்க நிலம் எடுப்பு செய்வதன் மூலம் மீனவர் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதா ல் துறைமுகம் கட்டுமானம் பணி நிறுத்த வேண்டும் எனவும், காட்டுப்பன்றிகள் மூலம் விவசாய நிலங்களில் ஏற்படும் சேதாரத்திற்கு வழங்கப்படும் இழப்பீடுத்தொகை உயர்த்திதரக்கோரியும், விவசாய நிலங்களுக்கு சூரிய ஒளி மின்வேலி அமைக்க வனத்துறை அனுமதி வழங்கிட வேண்டியும், குரங்குகளால் கிராமபுறங்களில், நகர்ப்புறங்களில் ஏற்படும் இடையூறுகள் நீக்கிடவும் உட்பட பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வனத்துறை சார்பாக தேவனேரி மற்றும் ஏரிகுப்பம் கிராமங்களின் 6 மகளிர் சுய உதவி குழுவினருக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ. 3 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளையும், திருவள்ளூர் வன கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வன உயிரினங்களால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக 7 விவசாயிகளுக்கு ரூ.2,42,075 மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகைக்கான ஆணைகளையும், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆகியோர் வழங்கினர்.

இதில் முதன்மை தலைமை வன பாதுகாவலர் சையத் முஜம்மில் அப்பாஸ்,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன்,(திருவள்ளூர்) ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),சு.சுதர்சனம் (மாதவரம்),ச.சந்திரன் (திருத்தணி), கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஏ.வெங்கடேஷ், கூடுதல் தலைமை வன பாதுகாவலர் வி.நாகநாதன்,மாவட்ட வன அலுவலர் கோ.ராம்மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், உதவி வன பாதுகாவலர் டி.செசில் கில்பர்ட், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் ஜே.மலர்விழி,வனச்சரக அலுவலர் (திருவள்ளூர்) விஜய் சாரதி,வனத்துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்