பதிவு:2022-07-05 16:06:40
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.1.33 லட்சம் மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்கள் : மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருவள்ளூர் ஜூலை 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 75 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 63 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 38 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 59 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 73 மனுக்களும் என மொத்தம் 308 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும், இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 24 பயனாளிகளுக்கு தலா ரூ.,5,580 வீதம் ரூ.1,33,920 மதிப்பீட்டிலான இலவச தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக 2019-2020-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு பொது தேர்வில் பாட வாரியாக 100 சதவிகிதம் இலக்கு எய்திய 3 அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளைச் சேர்ந்த 13 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு மாற்றுத்திறனாளிக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.