பதிவு:2022-07-09 09:40:29
திருவள்ளூர் அருகே வாகன விபத்தில் சிக்கிய மாணவனை மோட்டார் வாகன ஆய்வாளர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் கவின்.(21). காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கொசவன்பாளையம் கிராமத்திலிருந்து திருவள்ளூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருப்பாச்சூர் பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இதில் லாரியின் அடியில் இரு சக்கர வாகனத்துடன் மாணவன் கவின் சிக்கிக் கொண்டான். அப்போது இருசக்கர வாகனத்தின் பின்னால் வந்து கொண்டிருந்த திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் உடனடியாக தனது வாகனத்தில் இருந்து இறங்கி லாரியின் அடியில் இரு சக்கர வாகனத்துடன் சிக்கியிருந்த மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த கல்லூரி மாணவன் கவினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகன விபத்தின் போது சம்பவ இடத்தில் இருந்த வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் மாணவனின் உயிர் பிழைத்தான். இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.