திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

பதிவு:2022-03-20 21:05:54



திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன்கோவிலில் நேற்று பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்கவேல், தங்ககீரிடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு நகரத்தார் திருத்தணி பாத யாத்திரை குழுவை சேர்ந்த பக்தர்கள் மயில்காவடிகள் எடுத்தும், பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை திருக்குளத்தில் இருந்து படிகள் வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர். பின் காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம் மற்றும் பால்குட அபிஷேகம் நடந்தது.

பின்பு மதியம் 1 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7.30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி உத்திரம் என்பதால் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மூலவரை 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.