பதிவு:2022-07-21 21:59:49
போலியான பத்திரப்பதிவு செய்த திருவள்ளூர் சார் பதிவாளரை பத்திரப்பதிவு ஐஜி தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு
திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் சார்பதிவாளராக இருப்பவர் சுமதி. இவர் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தை திருவள்ளூர் சார் பதிவு அலுவலக எல்லைக்கு உட்பட்ட சொத்துடன் சேர்த்து திருவள்ளூர் சார்பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து சென்னையில் உள்ள பத்திரப்பதிவு ஐ.ஜி. யிடம் புகார் வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் சார் பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திர பதிவு ஐ.ஜி. சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார்.
இதனையறியாத சார்பதிவாளர் சுமதி வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்து பதிவுத்துறைக்கான வெப்சைட்டை திறந்துள்ளார். ஆனால் வெப்சைட் ஓப்பன் ஆகவில்லை என தெரிகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள பத்திரப்பதிவு ஐ.ஜி. அலுவலகத்திலிருந்து திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சார்பதிவாளர் சுமதியை பணியிடை நீக்கம் செய்ததற்கான கடிதம் பேக்ஸ் மூலம் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சார்பதிவாளர் சுமதி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு சென்றார். இதையடுத்து இணை சார்பதிவாளர் உமா சங்கரி பொறுப்பில் பத்திரப்பதிவு நடைபெற்று வருகிறது.