பதிவு:2022-07-21 22:21:31
திருவள்ளூர் மாவட்டத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டி முறையாக பராமரிக்காவிட்டால் கடும் நடவடிக்கை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை :
திருவள்ளூர் ஜூலை 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள மாநில சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பஞ்சாயத்து யூனியன் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள் முறையாக கட்டி பராமரிக்கப்படாமல் உள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கால்நடைகளை அவைகளின் உரிமையாளர்கள் உரிய பாதுகாப்போடு பராமரிப்பது அவரவரின் கடமை ஆகும். கால்நடைகள் அவ்வாறு முறையாக பராமரிக்கப்படாமல் அவைகள் சாலைகளின் இரவும் பகலும் சுற்றி திரிவதுடன் சாலைகளிலேயே படுத்து கொள்கின்றன. இதனால் போக்குவரத்து வாகனங்களுக்கு இடையூறுகள் ஏற்படுவதுடன் சாலை விபத்துகள் ஏற்பட்டு அதிகமான மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளும் விபத்துகளில் கடுமையாக பாதிப்படைகின்றன.
கால்நடைகள் அவைகளின் உரிமையாளர்களால் கட்டி முறையாக பராமரிக்கப்படாமல் சாலைகளில் சுற்றித் திரிவதால் மேற்படியான விபத்துகள் ஏற்பட்டு அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட காரணமாக இருப்பது சட்டப்படி குற்றமாகும்.எனவே, கால்நடைகளை சாலைகளில் அபாயகரமாக சுற்ற விடும் கால்நடை உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு நகர்புறங்களில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டப்படி 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் 5000 வரை அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வட்டத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வட்டாட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமிரிப்புத்துறை அலுவலர்கள் பஞ்சாயத்து அலுவலர்களுடன் இணைந்து தணிக்கை செய்து தவறிழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே, சாலை பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்தும் கால்நடைகளின் உரிமையாளர் மீது சட்டப்படி வழக்குகள் பதியப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.