பதிவு:2022-08-08 20:42:09
திருவள்ளூரில் வாக்காளர் அடையாள அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனைக் கூட்டம் :
திருவள்ளூர் ஆக 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அடையாள அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்ததாவது :
இந்திய தேர்தல் ஆணையம். சென்னை தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களிடம் இருந்து தன் விருப்ப அடிப்படையில் ஆதார் எண்; பெற்று வாக்காளர் பட்டியலில் பதிவு மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் 3657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை படிவம்-6B-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இப்பணியினை கண்காணித்திட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இப்பணியினை கண்காணித்திட துணை ஆட்சியர் நிலையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் அனைவரும் வீடு தேடிவரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6B மூலம் தெரிவித்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் மூலமாகவும் சமர்ப்பித்துக்கொள்ளலாம். மேலும், வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் 6B – I Elector- facing Portal/ Apps Like NVSP,VHA, ஆகியவற்றில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இருப்பின் அவர்களிடமிருந்து படிவம்- 6B ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை பெற்று இணைக்கப்பட வேண்டும். இப்பணியானது வாக்காளர் விபரங்களை உறுதி செய்யவும், வாக்காளர்களுக்கு நீடித்த சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் பொருட்டு மட்டுமே பெறப்படுகிறது. எனவே, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் சிறந்த முறையில் நிறைவேற்றிட அனைத்து வாக்காளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களின் மேலான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.