பதிவு:2022-08-12 13:06:48
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் அங்கன்வாடிகளில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த தாயும், சேயும் திட்டம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்
திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஊராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் அங்கன்வாடி வளாகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் தாய், சேய் என்ற திட்டம் தொடங்கி வைத்தல் மற்றும் பனை விதை வங்கி மற்றும் பனை விதை குறித்த விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத்தலைவர் பர்கத்துல்லாகான், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், பூவண்ணன், ஊராட்சி தலைவர் சுபத்ரா ராஜ்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று அங்கன்வாடிகளில் தாய், சேய் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மூலம் ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் 6 மாத குழந்தைகளுக்கு கடந்த மாதம் எடை உயரம் எடுக்கப்பட்டது. அப்போது, இம்மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 868 குழந்தைகளில் தீவிர எடை குறைவாக குழந்தைகள் 1857-ம், மிதமான எடை குறைவாக -7208-ம், கடுமையான மெலிவு தன்மை கொண்டதாக 1719-ம், மிதமான மெலிவு தன்மை 4868 குழந்தைகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் முக்கியமாக 6 மாதம் முதல் 2 வயதுள்ள குழந்தைகள் 575 தீவிர எடை குறைவாகவும், 1875 குழந்தைகள் மிதமான எடை குறைவாகவும், 607 குழந்தைகள் தீவிர மெலிவு தன்மையுடனும், 1430 குழந்தைகள் மிதமான மெலிவு தன்மையுடன் உள்ளது என்றும் தெரிவித்த அமைச்சர் நாசர், இக்குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்த திட்டத்தின் ஒரு பகுதியாக தாய், சேய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்திட்டம் ஆரோக்கியமாக வளர்த்த தாயின் மூலம் எடை குறைந்த அளவில் உள்ள குழந்தையின் தாய்க்கு உற்ற தோழியாகவும் குழந்தை வளர்ப்பில், உணவூட்டுதலில் ஆலோசனை வழங்குபவராகவும், எடையை அதிகரிக்க உதவி செய்பவராகவும் இருப்பார். இதில் முதல் கட்டமாக காக்களூர் அங்கன்வாடி மையத்தைச் சேர்ந்த 25 குழந்தைகளுக்கு தாய், சேய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அங்கன்வாடிகளுக்கும் செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்னர் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பொட்டலங்கள், அங்கன்வாடிகளுக்கு எடை அளவு இயந்திரங்களையும், பனை விதை வங்கி மற்றும் பனி விதை குறித்த விழிப்புணர்வு கையேடுகளையும் அவர் வழங்கினார். திருவள்ளூர் நகர் மன்றத் துணைத் தலைவரும், திருவள்ளூர் நகர திமுக செயலாளருமான சி.சு.ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட அலுவலர் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதிநாதன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.