ஊராட்சி மன்றத் தலைவர் மாயமானதால் பரபரப்பு: அவரைக் கண்டுபிடித்து தருமாறு கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

பதிவு:2022-08-18 08:35:29



அருமந்தை கிராமத்தில் சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்றவிடக் கூடாது என்பதற்காக பொய் புகார் கொடுத்தும், கிராம சபைக் கூட்டத்தில் கைது செய்யவும் காவல் துறையினருடன் இணைந்து செயல்பட்டதால் சுதந்திர தினத்தன்று முன்னதாக தேசியக் கொடியேற்றிவிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மாயமானதால் பரபரப்பு: அவரைக் கண்டுபிடித்து தருமாறு கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

ஊராட்சி மன்றத் தலைவர் மாயமானதால் பரபரப்பு:   அவரைக் கண்டுபிடித்து தருமாறு கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்

திருவள்ளூர் ஆக 17 : திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட அருமந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரமன். கடந்த 50 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் யாரும் இல்லாத நிலையில் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதனையடுத்து பொது மக்களிடம் எளிமையான முறையில் நடந்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் கோரி்க்கைகளை நிறைவேற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன், காலில் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டியவன், உடம்பில் சட்டை இல்லாமல் நடக்க வேண்டியவன் வெள்ளை சட்டை போட்டு எங்களை ஆள்வதா என்று கிராம பொது மக்களிடையே சிலர் சாதிய வன்மத்துடன் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி மன்றத் தலைவரை பணி செய்ய விடாமல் தடுப்பதுடன் பொய்யான புகார்களை காவல் நிலையத்தில் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர். கண்ணன் என்பவரும் அவரது உறவினர்கள் கேசவன், , குப்பன், ஆகியோர் ஆக்கிரமித்து அனுபவித்து வரும் சுமார் 3 ஏக்கர் புறம்போக்கு நிலங்களை அவர்கள் வசமாக்க ஊராட்சி மன்றத் தலைவரை அணுகிய நிலையில் அதற்கு அவர் மறுத்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த எம்.சுதாகர், என்.சுதாகர் ஆகியோர் தொடர்ந்து சாதி அடிப்படையிலான தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக காவல் நிலையத்திலும் விக்ரமன் புகார் கொடுத்துள்ளார்.

அதே போல் கேசவன், குப்பன், கண்ணன் ஆகியோர் கோவில் திருவிழா சம்மந்தமாக நோட்டிஸ் கொடுக்க சென்றாலும், அங்கேயு்ம சாதி ரீதியிலான தரக்குறைவான வார்த்தைகளாலும், தகாத வார்த்தைகளாலும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து துணைத் தலைவர் ஆர்,.கண்ணன் ஆக்கிரமித்த இடத்தை அகற்ற ஊராட்சி நிர்வாகத்தினர் ந்தனர். அப்போது ஆர்.கண்ணனின் ஆதரவாளர்கள் சிலர் ஊராட்சி மன்றத்தலைவர் லஞ்சம் கேட்பதாக சொல்லி சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்றவிடக்கூடாது என்றும், கிராம சபைக் கூட்டத்தில் கைது செய்யவும் காவல் துறையினருடன் இணைந்து ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் மற்றும் சிலர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுதந்திர தினத்தன்று முன்னதாக தேசியக் கொடியேற்றிவிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மாயமானதால் அவரைக் கண்டுபிடித்து தருமாறும், தாழ்த்தப்பட்ட ஊராட்சி மன்றத்தலைவரின் உயிருக்கும் அவர் பதவிக்கும், எங்கள் கிராமத்திற்கு நல்வழி வகுத்திடவும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அருமந்தை கிராம மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உறுதியளித்ததையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து சென்றனர்.