பதிவு:2022-09-07 21:53:15
திருவள்ளூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம் :
திருவள்ளூர் செப் 07 : திருவள்ளுர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் மாவட்ட காவல் நிலையங்களில் மதுவிலக்கு வழக்குகளில் சம்மந்தப்பட்டு பறிப்பிழப்பு செய்யப்பட்டுள்ள 394 இருசக்கர வாகனங்கள், 10 மூன்று சக்கர வாகனங்கள், 26 நான்கு சக்கர வாகனங்கள், 1 ஆறு சக்கர வாகனங்களை வருகின்ற 19.09.2022, 20.09.2022, 21.09.2022 ஆகிய தேதிகளில் காலை 10 மணியளவில் திருவள்ளுர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தின் அருகே 431 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது.
வாகனங்களை ஏலம் கேட்க வருபவர்கள் முகக்கவசம் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் மூன்று சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். அதற்கான டோக்கன் காலை 8 மணி முதல் 10 மணி வரை வழங்கப்படும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இரு சக்கர வாகனத்திற்க்கு அரசு விற்பனை வரி 12 சதவிகிதம் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவிகிதம் உடனடியாக செலுத்தி விட வேண்டும்.
வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டு தொகை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர்கள் உரிமையாளருக்கான பதிவுச்சான்று, ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும். மற்றும் பொது ஏலத்தில் கலந்துகொள்ள வருபவர்கள் ஆதார் கார்டு,அரசால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை தவறாமல் கொண்டு வரவேண்டும். ஏலத்தில் கலந்து கொண்டு வாகனம் எடுக்காதவர்களுக்கு முன் வைப்பு கட்டணத் தொகை ஏலத்தின் முடிவில் திருப்பித் தரப்படும் என திருவள்ளூர் காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரதாசன் தெரிவித்துள்ளார்.