இனிப்பு கார வகைகள் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற வேண்டும்

பதிவு:2022-10-07 10:13:16



இனிப்பு கார வகைகள் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற வேண்டும் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை

இனிப்பு கார வகைகள் தயார் செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறை உரிமம் பெற வேண்டும்

திருவள்ளூர் அக் 06 : இனிப்பு கார வகைகள் தயார் செய்வோர் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை செய்வோர்களும் கட்டாயம் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்றிருப்பது அவசியம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

பண்டிகை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் அனைத்து விதமான விற்பனைகளும் அதிகரித்துள்ளது. இதில் தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரவகைகள், கேக் போன்ற பேக்கரி உணவு பொருள்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் கலாச்சாரமாக விளங்கி வருகிறது.அதனால் தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துவோர் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாகும்.

இனிப்பு காரவகைகள், பேக்கரி பொருள்கள் தயார் செய்வோர் தரமான மூலப் பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப் பொருள்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்பட பொருள்களையோ, அனுமதித்த அளவிற்கு அதிகமாக நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணையை மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்த கூடாது.

அதேபோல் பேக்கிங் செய்த உணவு பொருள்களுக்கு விபரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், பேக்கிங் செய்த நாள், பயன்பாட்டு காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவைகளை அவசியம் குறிப்பிட வேண்டும்.அதேபோல் பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயார் செய்வோர் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனே உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-இன் படி தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் உணவு தயாரிப்பாளர்கள் அனைவரும் ஊர்ள்ற்ஹஸ்ரீ பயிற்சி பெற்றிருப்பது அவசியம்.

இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருந்தால் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் செய்யலாம். மேலும், நியமன அலுவலரின் அலுவலகம் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவு இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளுர்- 602 001 என்ற முகவரியிலோ அல்லது 044-27662002 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.