பதிவு:2022-10-12 13:56:53
திருவள்ளூரில் அமேசான் டெலிவரி வாகனத்தில் இருந்து லேப்டாப்பை திருடிச் சென்ற முன்னாள் டெலிவரி ஊழியரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் கைது செய்தனர்
திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் டோல்கேட் ஜே.ஜே.நகர் பகுதியில் வசித்து வருபவர் செல்வம் என்பவரது மகன் அன்புச் செல்வன். இவர் திருவள்ளூரில் இயங்கி வரும் அமேசான் நிறுவனத்தில் டெலிவரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தினசரி மினி வேனில் அமேசான் பொருட்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நகர் முழுவதும் சென்று அதை டெலிவரி செய்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந் 01:10:2022 அன்று வழக்கம் போல் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்று பிற்பகல் வரை டெலிவரி செய்தார்.
பின்னர், டோல்கேட் ஜே.ஜே.நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று உணவருந்தி விட்டு வெளியில் வந்து மீண்டும் வாகனத்தை எடுத்து டெலிவரி செய்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட ஜெயா நகர் பகுதியில் உள்ள ஒருவருக்கு லேப்டாப் டெலிவரி கொடுக்க வேண்டியிருந்தது .ஆனால் வாகனத்தில் பார்த்தபோது லேப்டாப் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். காலையில் அமேசான் டெலிவரி நிறுவனத்தில் இருந்து எடுக்கும் போது இருந்த லேப்டாப் மதியம் உணவு அருந்துதற்காக வீட்டிற்கு சென்றிருந்த போது மாயமானது அன்புச் செல்வனுக்கு தெரியவந்தது.
இது குறித்து அன்புச்செல்வன் திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி தலைமையிலான போலீசார் அன்புச்செல்வன் வீடு மற்றும் அந்த வாகனம் சென்ற இடங்களில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர் .அதன் அடிப்படையில் மர்ம நபர் ஒருவர் பைக்கின் முன்புறம் லேப்டாப்பை வைத்து எடுத்துச் சென்றது தெரிந்தது. இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் திருவள்ளூர் தலக்காஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சின்னா பாட்ஷா (வயது 30) என்பதும் அவர் ஏற்கனவே அமேசான் டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்ததும் தெரியவந்தது.
மேலும், அங்கு ஊதிய பிரச்சனை காரணமாக பணியிலிருந்து நிறுத்தப்பட்டதும் தெரியவந்தது. இதனால் பழிவாங்கும் விதமாக அவர் லேப்டாப்பை திருடி சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து லேப்டாப்பை மீட்ட திருவள்ளூர் டவுன் போலீசார் சின்னா பாட்ஷாவை திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.