பதிவு:2022-10-12 23:27:09
சிறந்த ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஆவடி முதல் திருவள்ளூர் வரை நடைபெற்ற ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் 3.0 மாரத்தான் ஓட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு
திருவள்ளூர் அக் 12 : திருவள்ளூர் மாவட்டம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பாக அக்டோபர் 2 முதல் நடைபெற்று வரும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே சிறந்த ஆரோக்கியத்தை வலியுறுத்தி ஆவடி முதல் திருவள்ளுர் வரை நடைபெற்ற ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் 3.0 என்ற மாரத்தான் ஓட்டம் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து அவ்விழிப்புணர்வு மாரத்தானில் பங்குபெற்ற விஞ்ஞானிகள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டினார்.
ஃபிட் இந்தியா ஃபிரீடம் ரன் என்பது 2020-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் உடற் தகுதியை தனிநபரின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் நோக்கம் சிறந்த ஆரோக்கியம் மற்றும் உடற் தகுதிக்கான தேடலுடன் மக்களிடையே நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பழக்கத்தை ஊக்குவிப்பதாகும்.
இந்த ஃபிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்,பாதுகாப்பு அமைச்சகம் கடந்த அக்டோபர் 2-ந்தேதி முதல் ஃபிட் இந்தியா ஃப்ரீடம் ரன் 3.0 இன் 3-வது பதிப்பை நோக்கி தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் முன் முயற்சியின் கீழ் மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 2-ந் தேதி பிளாக் ரன் மூலம் பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் இரண்டாவது நிகழ்வு அக்டோபர் 12-ந் தேதியன்று, சி.வி.ஆர்.டி.இ பிரதான நுழைவு வாயிலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,திருவள்ளூர் வரை ஃபிட் இந்தியா பேரணியாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 150 சி.வி.ஆர்.டி.இ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த பேரணியை ஆவடியில் உள்ள சி.வி.ஆர்.டி.இ.யில் சி.வி.ஆர்.டி.இ.யின் முதன்மை விஞ்ஞானி மற்றும் இயக்குநரான வி.பாலமுருகன் மற்றும் டாக்டர்.வி.பாலகுரு, முதன்மை விஞ்ஞானி மற்றும் கூடுதல் இயக்குனர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
வழியில் சி.வி.ஆர்.டி.இ குழு பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று ஃபிட் இந்தியா இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிறைவாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை புரிந்ததைத் தொடர்ந்து மாரத்தானில் பங்குபெற்ற பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மாவட்ட ஆட்சியருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் செ.அருணா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழக விஞ்ஞானிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.