திருவள்ளூரில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

பதிவு:2022-10-20 10:14:31



திருவள்ளூரில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூரில் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் அக் 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து பேசினார்.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதே வேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு கடைப்பிடிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம்,உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளையும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதையும், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதையும் தவிர்க்க வேண்டும். எனவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாடுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடை பேரணியையும், ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம் 19.10.2022 மற்றும் 20.10.2022 ஆகிய இரு தினங்களுக்கு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் ஆட்டோ ரிக்ஷா விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட சுற்றுசூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், உதவி சுற்றுசூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் கே.ரகுகுமார், எஸ்.சபரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.