பதிவு:2022-10-20 15:10:23
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற செக்யூரிட்டி பலி
திருவள்ளூர் அக் 20 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம் புதூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஆனந்தவேல் (56) என்பவர் மப்பேட்டில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரவு வேலையை முடித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.அப்போது கடம்பத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் ஏறி வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் மேம்பாலத்திலிருந்து கீழே இறங்கிய போது திருவள்ளூரிலிருந்து பேரம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் (TN 20.G.2742) மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த ஆனந்தவேலை பொதுமக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.மேலும் விபத்து ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்கரவர்த்தி என்பவரது மகன் செந்தில் குமார் (38) என்பவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்துடன் மப்பேடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.மப்பேடு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.