பதிவு:2022-11-07 22:45:41
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
திருவள்ளூர் நவ 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் வழங்கினர். இதில் நிலம் சம்பந்தமாக 98 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 36 மனுக்களும், வேலைவாய்ப்பு தொடர்பாக 33 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 47 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 74 மனுக்களும்; என மொத்தம் 288 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேலும்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், ஆவின் பாலகம் அமைக்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளிக்கு 100 சதவிகித மானியத்தில் பால் உற்பத்தி பொருட்கள் கொள்முதல் செய்வதற்கு தேவையான துவக்க நிதி ரூ.50 ஆயிரத்திற்கான ஆணையினையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.600 மதிப்பீட்டிலான ஊன்றுகோலினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.ச.பாபு, தனித்துணை ஆட்சியர் பி.ப.மதுசூதணன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கா.காயத்ரி சுப்பிரமணி, மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.