பதிவு:2022-11-09 08:56:58
திருவள்ளூரில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்
திருவள்ளூர் நவ 08 : “பிளாஸ்டிக்களுக்கு எதிரான மக்கள் பிரச்சாரம்" செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பங்குதாரர்களை அழைத்து மக்கள் இயக்கம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.இதனையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் 23.12.2021 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் "மீண்டும் மஞ்சப்பை" என்ற மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடுவாரியம் சார்பாக, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்து பேசினார்.
மாநிலம் முழுவதும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட அளவில் "மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் நடத்த மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மூலம் தொழிற்சாலைகள் நிதியுதவியுடன் 6 மஞ்சப்பை விற்பனை இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சபையை பெற்றுக்கொள்ளலாம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் “ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து, முதன் முறையாக மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், திருவள்ளுர் அலுவலகத்திலும் நிறுவப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கப்படுகிறது. மேலும், திருவள்ளுர் பேரூந்து நிலையம், ஆவடி பேரூந்து நிலையம், பொன்னேரி பேரூந்து நிலையம், திருத்தணி முருகன் கோயில் ஆகிய இடங்களில் விரைவில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் நிறுவி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்கபட உள்ளது.
மஞ்சப்பை விற்பனை இயந்திரத்திற்கு 2000 மஞ்சள் துணி பைகள் வழங்கப்படும். மேலும், அந்த இயந்திரத்தின் மூலம் பைகளை விற்பனை செய்யும் போது சேகரிக்கப்படும் தொகை மஞ்சள் துணி பைகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். இந்த முறையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை நிலையான முறையில் பராமரிக்க முடியும். புதிய ரூ.1, புதிய ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 நாணயங்களை ஏற்றுக்கொள்வதற்கு எலக்ட்ரானிக் காயின் வேலிடேட்டரும் ரூ.10 மதிப்புள்ள எலக்ட்ரானிக் நோட்டு வேலிடேட்டரும் இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளதால் அதனை செலுத்தி தேவையான துணிபைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
இதில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ப.ரவிச்சந்திரன், மாசு கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச் சூழல் பொறியாளர் பா.சி.சம்பத்குமார், மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர்கள் கி.ரகுகுமார், சு.சபரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள கலந்துக் கொண்டனர்.