ரூ.1.90 கோடியில் ஐந்து துணை வேளாண் விரிவாக்க மையங்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

பதிவு:2022-11-23 08:31:23



வெள்ளவேடு பகுதியில் துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழாவில் ரூ.1.90 கோடியில் ஐந்து துணை வேளாண் விரிவாக்க மையங்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார் :

ரூ.1.90 கோடியில் ஐந்து துணை வேளாண் விரிவாக்க மையங்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் நவ 22 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டத்திற்குட்பட்ட, வெள்ளவேடு பகுதியில் வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக புதிதாக கட்டப்பட்ட துணை வேளாண் விரிவாக்க மையம் திறப்பு விழாவில் வெள்ளவேடு உட்பட சின்னநாகப்பூண்டி, பாதிரிவேடு, பொன்னேரி மற்றும் பாண்டேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ரூ.38 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான ஐந்து துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் திறந்து வைத்து, பார்வையிட்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 14 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்களும், 28 துணை வேளாண் விரிவாக்க மையங்களும் செயல்பட்டு வருகின்றன. துணை வேளாண் விரிவாக்க மையங்கள் அனைத்தும் மிகவும் பழமையானதாகவும், பழுதடைந்த நிலையிலும் இருந்ததால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முதற்கட்டமாக ஒரு துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு ரூ.38 இலட்சம் வீதம் 8 துணை வேளாண் விரிவாக்க மையங்களின் புதிய கட்டுமானப் பணிக்கு மொத்தம் ரூ.3.04 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டது.

நாம் உற்பத்தி செய்கின்ற அனைத்து பொருட்களையும் சேமிப்பு கிடங்கில் சேமித்து வைத்து, அதன் மூலம் வாணிபம் செய்வதற்கு ஏதுவாக ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் 8 துணை வேளாண் விரிவாக்க மையங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெற்று கட்டுமானப் பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று முதற்கட்டமாக ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் 5 துணை வேளாண் விரிவாக்க மைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பாட்டிற்காக, அம்மையங்களுக்கான பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டமாக பேரம்பாக்கம், பட்டரைப்பெரும்புதூர் மற்றும் கனகம்மாசத்திரம் முதலிய துணை வேளாண் விரிவாக்க மையங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும். இந்த துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வேளாண் இடுபொருட்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்டக் கலவைகள் மற்றும் உயிர்க்கட்டுப்பாட்டுக்காரணிகள் முதலியவை விவசாய பெருங்குடி மக்களுக்கு தேவையான அளவில் பாதுகாப்பாக இருப்பு வைத்து விநியோகம் செய்ய இத்துணை வேளாண் விரிவாக்க மையங்கள் மிகவும் வசதியாக இருக்கும். இதனால் சுமார் 50,000 விவசாயிகள் பயனடைவார்கள்.

கடந்த 10 ஆண்டு காலம் செயல்படுத்தப்படாமல் இருந்த திட்டங்களை எல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் மெருகூட்டி எந்தெதந்த விவசாய பெருங்குடி மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அவையனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். விவசாயிகளின் தேவைகளை அறிந்ததன் அடிப்படையில் தான் ரூ.33,000 கோடியை வேளாண்மை துறைக்கென ஒதுக்கி அத்துறைக்கான தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய வழிவகுத்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பும், ஒரு வாரத்திற்கு முன்பு 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பும் என மொத்தம் ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சர் உழவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில், பல நல்ல திட்டங்களையெல்லாம் தீட்டி இந்த 18 மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கியுள்ளது என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து வெள்ளவேடு உட்பட சின்னநாகப்பூண்டி, பாதிரிவேடு, பொன்னேரி மற்றும் பாண்டேஸ்வரம் ஆகிய இடங்களில் தலா ரூ.38 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.90 கோடி மதிப்பீட்டிலான ஐந்து துணை வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கும் அடையாளமாக அம்மையங்களுக்கான கல்வெட்டுகளை பால்வளத் துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் திறந்து வைத்து, அத்துணை வேளாண் விரிவாக்க மையங்களுக்கான பணிகளையும் துவக்கி வைத்தார்.

மேலும், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பாக 8 பயனாளிகளுக்கு மானிய விலையில் பச்சை பயிறு விதைகள், நெல் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், 2 பயனாளிகளுக்கு விசை தெளிப்பான்களும், தோட்டக்கலை துறை சார்பாக விதைகள் மூலம் காய்கறி பயிர்கள் பரப்பு விரிவாக்கம் செய்யும் திட்டத்தின் கீழ் 10 விவசாயிகளுக்கு வெண்டைக்காய் விதைகளும், பயிர் பரப்பு விரிவாக்கம் திட்டத்தின் கீழ் மிளகாய் நாற்றுகளும், முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டத்தின் கீழ் தென்னை நாற்கழிவு கட்டி, காய்கறி விதை மற்றும் மண்புழு உரங்களும், வேளாண் பொறியியல் துறை சார்பாக வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்கம் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.50 இலட்சம் மானியத்தில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டிலான உழுவை இயந்திரம் (டிராக்டர்)-மும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக 2 பயனாளிகளுக்கு மாவு வகை பொருட்கள், நிலக்கடலை தோல் உரித்தல் மற்றும் தரம் பிரித்தலுக்கான இடுபொருட்களும் மற்றும் கூட்டுறவு துறை சார்பாக உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 12 பயனாளிகளுக்கு ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் நெல் சாகுபடிக்கான பயிர்க் கடன், கறவை மாடு பராமரிப்புக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்கள் பெறுவதற்கான ஆணைகளையும் என மொத்தம் 35 பயனாளிகளுக்கு ரூ.24,08,160 மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார்.

இதில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, திருவள்ளூர் சார் ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் டி.தேசிங்கு, வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேஷன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.