பதிவு:2022-11-27 19:36:34
திருத்தணி அருகே காப்புகாட்டு பகுதியில் ஜேசிபி எந்திரங்கள் மூலம் மரங்களை அழித்து கிராவல் மண் கொள்ளை : மாவட்ட நிர்வாகம், காவல் துறை நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் நவ 26 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாபுரம் கிராமம் அருகே அடர்ந்த காப்புக்காடு உள்ளது. இந்த வனப் பகுதியில் காட்டு பன்றிகள், மான், மயில் உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உள்ளன. இந்த வனப் பகுதியில் சுமார் 5 அடி முதல் 10 அடி ஆழத்திற்கு ஜேசிபி இயந்திரம் மூலம் குழிகள் தோண்டி கிராவல் மண் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராவல் மண் எடுப்பதற்காக வனப்பகுதியில் இருந்த மரங்கள் பலவற்றை அழித்துள்ளனர்.
வனப்பகுதியில் இருந்த கிராவல் மண்ணை பல நாட்களாக லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கார்த்திகேயபுரம் வனப்பகுதியில் நடைபெறும் மண் திருட்டை வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.இரவு நேரங்களில் உரிய அனுமதி இல்லாமல் மண், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை கடத்தும் லாரிகள் திருத்தணி வழியாக வந்தால் போலீசாரிடம் சிக்கி விடுவோம் என்பதற்காக கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாக வந்து கார்த்திகேயபுரம் காப்பு காட்டுக்குள் நுழைந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்குள் சென்று விடுகின்றனர்.
இதனால் பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம் வனப்பகுதிக்கு இடையே லாரி செல்லும் அளவிற்கு மண் சாலை உருவாகியுள்ளது.விதிமுறைகளை மீறி வனப்பகுதியில் மண் எடுக்கப்படுவதாலும் மனிதர்களுக்கும், வனவிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. வனப்பகுதியில் மண் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,மாவட்ட எஸ்பி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.