பதிவு:2022-12-16 09:16:14
மத்திய அரசுப்பணி தேர்வாணையம் வெளியிட்டுள்ள பணிகாலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
திருவள்ளூர் டிச 15 : மத்திய அரசில் இளநிலை செயலக உதவியாளர், கீழ் பிரிவு எழுத்தர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ~அ~ போன்ற பல பணிக்காலியிடங்களுக்கு மத்திய அரசுப்பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இப்பணிகாலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 01.01.2022 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. மொத்த பணிக்காலியிடங்கள் 4,500 (இந்திய முழுவதும்), இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023 ஆகும்.
மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும் விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in/ என்ற இணையதள முகவரியை பயன்படுத்த வேண்டும்.திருவள்ளூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் 19.12.2022 அன்று நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்போட்டித் தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் திருவள்ளூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் 9499055893, 8637639822 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.