தேசிய அளவில் பதக்கம் வென்ற கால்பந்து வீரர், வீராங்கனை பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

பதிவு:2022-12-21 10:55:45



தேசிய அளவில் பதக்கம் வென்ற கால்பந்து வீரர், வீராங்கனை பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

தேசிய அளவில் பதக்கம் வென்ற கால்பந்து வீரர், வீராங்கனை பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :

திருவள்ளூர் டிச 21 : தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “விளையாடு இந்தியா" திட்ட நிதியுதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான “எஸ்.டி.ஏ.டி விளையாடு இந்தியா மாவட்ட மையம்" திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர் ஃ வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போதும் திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக்கட்டணமாக ரூ.18,000 வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.இதற்குரிய விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் 21.12.2022 முதல் 03.01.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு திருவள்ளூர் ஒருங்கிணைந்த மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.