பதிவு:2022-04-20 11:27:57
திருவள்ளூரில் காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்ட்ராய்டு கைப்பேசி மற்றும் காதொலி கருவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
திருவள்ளூர் ஏப் 20 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும், பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வழங்கிட வேண்டியும் மனுக்களை அளித்தனர். இதில் நிலம் சம்பந்தமாக 57 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 23 மனுக்களும்,வேலைவாய்ப்பு தொடர்பாக 18 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 42 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 66 மனுக்களும்; என மொத்தம் 206 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் சிறு மற்றும் குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து ரூ.6,25,000-ம் கடன் தொகையாக பெற்ற 7 பயனாளிகளுக்கான மானியத் தொகையாக ரூ.1,66,666 த்திற்கான காசோலைகளை 7 பயனாளிகளுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பார்வையற்ற, காதுகேளாத மற்றும் வாய்பேச இயலாத 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.12,772 வீதம் ரூ.63,860 மதிப்பீட்டில் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளை 5 பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தின்படி, மனவளர்ச்சி குன்றிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாவலர் நியமன சான்றிதழ்களை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, காதொலி கருவி வேண்டி மனு வழங்கிய ஒரு மாற்றுத்திறனாளிகளின் மனுவினை ஆட்சியர் உடனடியாக பரிசீலனை செய்து, உடனடியாக தலா ரூ.3,058 வீதம் ரூ.6116 மதிப்பிலான இரண்டு காதொலி கருவிகளை இலவசமாக வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.மீனா பிரியா தர்ஷிணி, திருவள்ளூர் மாவட்ட சார் ஆட்சியர் (பயிற்சி) ஏ.பி.மகாபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, பேச்சு பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.